*

முன்றில் வேம்பு
நினைவுள் புதைந்த வேப்பம் வித்து
திறக்கும் இணைய ஓவியத் தளமாய்
நெஞ்சுள் பசும் குடை விரிக்க

காலத்தை மீட்டு வாழ்ந்தேன்.
முலை அமுது உண்டேன்.
நிழலில் தவழ்ந்து
மண் விழையாடினேன்
என் அயல் சிறுமி
`குஞ்சாமணியை`
எங்கே தொலைத்தாள்
என்று வியந்தேன்.
பாட்டி கதைகளில் முடிகள் புனைந்தேன்.
கோயிற் பொங்கலில்
நீறு பூத்த தணற் பாவைகளாய்
வெளியே நின்ற சிறுவரை எனது
பால்ய நண்பர்கள் சீண்ட வெகுண்டு
அதிர்ந்த மனசை
"அது அது அவர் அவர்
ஊழ்வினைப் பயன்" என
தேற்றிய பாட்டியை நம்ப மறுத்தேன்.
எங்கள் வீட்டில் சமைக்கிற பெண்ணுடன்
அம்மணமாக மாமா இருந்ததை
கண்டதன் பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன்.
ஆண்குறி விறைக்க நோயென அஞ்சி
விம்மி அழுதேன்.
என் அயலாள் மிரள
முதன் முதலாக
விசத் தேன் குளவிக் கூடாய்த் திரண்ட
இள முலை உண்டேன்.
மனதுள் கிழைகள் நெரியும்
வேம்பின் வேருள் என் காலப்புதையல்.
நினைப்புத்தானே இளமையும் முதுமையும்.
சூரியப் பந்தை ஏந்த உயரும்
முன்றில் வேம்பினைச் சுற்றி
வயது உடைய முன் செல்கிறது
வட்டப் பாதையில் என் காவிய வாழ்வு.
நான் வேண்டுவது
காதலும் கவிதையுமாக
சோடி கூடியும்
கண்ணீரும் புலம்பலுமாகத் தனித்தும்
குயில்கள் பாடிப் பாடி வளர்த்த
எனது வேப்ப மரத்தின் நீழலே.
நான் ஆசைப்படுவது
விடுதலை அடைந்த தோழியரோடு
குறுகிய இரவுகளும்
விடுதலைக் கெழுந்த தோழர்களோடு
நீண்ட இரவுகளும்
துணையாய் இருந்த என் வேம்பின் கீழே
பொறுமையாய் நிலா பூக்கள் தைத்த
கரும் கம்பளமே.
நான் வேண்டுவது
புத்தன் தேவனான போதி மரமல்ல
அன்னையின் முலை அமுதம் உண்டும்
தோழியர் அமுத முலையினை உண்டும்
நான் மனிதனான
வேப்ப மரமே.

- வ.ஐ.ச.ஜெயபாலன்

No comments:

Post a Comment